எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும் போது அதைப் போக்க 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.
*1. தியானம்*
தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தைப் போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழ வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
*2. புன்னகை*
கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாகத் தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முகத்தைப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டுப் பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசை நார்கள் இலகுவாகி விடும். சிரிப்பை விட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.
*3. நண்பர்கள்*
முடிந்தவரை நேர்மறையாகப் பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.
*4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்*
சிரமங்களைப் பற்றியும் கஷ்டங்களைப் பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப் பாருங்கள்.
*5. குறை கூறாதீர்கள்*
உங்களைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப் போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதைச் சரி செய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப் பாருங்கள். நல்லதே நடக்கும்.
*6. உதவுங்கள்*
எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசை திருப்ப இதை விட சரியான வழி இருப்பதாய்த் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும் போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிடத் துவங்கும்.
*7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது*
தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும் போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
*8. பாடுங்கள்*
உங்களுக்குத் தெரிந்த ஏதாவது பாடலை முணுமுணுக்கத் துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையைக் குறைத்து லேசாக்கும்.
*9. நன்றி கூறுங்கள்*
நன்றி கூறுவதை விட சிறந்த நேர்மறை உணர்வு இருக்க முடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.
*10. நல்லதைப் படியுங்கள்*
தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறைச் செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டி விடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்து வரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.

Comments
Post a Comment